புதுடெல்லி:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு பிரபல வக்கீல் நாரிமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு சார்பில் காவிரி வழக்கு சம்பந்தமாக ஆஜராகி வாதாடி வருபவர் பிரபல மூத்த வக்கீல் நாரிமன்.

கர்நாடக அரசு மீது, தமிழக அரசு காவிரி பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக அரசு வக்கீல் நாரிமன், சித்தராமையாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது வக்கீல் நாரிமன், காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு பதில் அளித்த சித்தராமையா, காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை என்று கூறினார்.
இதை ஏற்க மறுத்த வக்கீல் நாரிமன், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனுவால் சட்ட சிக்கல் ஏற்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய கருத்தை நியாயப்படுத்துவது கடினம் என்றார். எனவே, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு ஆலோசனை கூறியதாகவும், தண்ணீரை திறக்காவிட்டால் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கில் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கர்நாடக முதல்வ்ர், அவரது ஆலோசனையை புறந்தள்ளியதாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற நிலையில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எப்படியாவது, இந்த வழக்கில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்க ஆவன வேண்டும் என்றும், இதுபற்றி விரிவாக விவாதிக்க நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீலை டெல்லிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும்கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.
Patrikai.com official YouTube Channel