மும்பை:
செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
வங்கிகளில் பெற்ற ர9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு சார்பில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததுடன், லண்டனிற்கு தப்பிச் சென்றார் விஜய் மல்லையா. இதனால் அருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகும் விஜய் மல்லையா ஆஜராகாததால், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. மேலும், தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். அவர் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில் வேறொரு பிரச்சினையும் கிளம்பியது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் இந்திய விமான நிலையதுறைக்கு ரூ.100 கோடிக்கான 2 செக்குகளை கொடுத்தது.
ஆனால் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் மல்லையா கொடுத்த காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்தது. ஆகவே இது தொடர்பாக இந்திய விமானநிலையங்கள் ஆணையம் சார்பில், மும்பை அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிடன் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் லால்கர், ஜூலை 16ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் நேற்றும் கோர்ட்டில் விஜய் மல்லையா ஆஜராகததால் அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டை மாஜிஸ்திரேட் பிறப்பித்தார்.
Patrikai.com official YouTube Channel