டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, மூன்று நாள்கள் சிறப்பு அமா்வு ஏப்ரல் 16ந்தேதி அன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், மத்தியஅமைச்சர் மேக்வால், இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்தார். இதறகு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என வலுயுறுத்தப்பட்ட நிலையில், விவாதத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கு பதிலளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மக்களவை – பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெற்று வருகிறது.
இந்த மசோதாக்களுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், மசோதாக்களை தாக்கல் செய்ய ஆதரவாக 251 உறுப்பினர்களும் எதிராக 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தொடர்ந்து, மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியுள்ளது.
மகளிா் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பை பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பலத்த எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டனர். தமிழக எம்.பி.க்கள் கருப்பு சட்டையுடன் கலந்துகொண்டனர்.
பிற மசோதாக்களை நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை போதும் என்ற நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை அவசியம். அதாவது, மசோதாவுக்கு ஆதரவாக மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தேவை; அத்துடன், அவையில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்று இரு பங்கு வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.
மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 உறுப்பினா்களும், எதிா்க்கட்சிகளுக்கு 233 உறுப்பினா்களும் உள்ளனா். ஆகையால், மசோதாவுக்கு எதிா்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]