சென்னை: விழுப்புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் , ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசைகண்டித்து, அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பிப்.5-ம் தேதி (நாளை) மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபயணம், கிழக்கு தாம்பரம்-பாரத மாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் – சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோன்று, பிப்.7-ம் தேதி திருச்சியிலும், 8-ம் தேதி திண்டுக்கல்லிலும், 9-ம் தேதி தென்காசியிலும், 12-ம் தேதி கோவையிலும் நடைபயணம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கையில், சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் ரூபாய் 26 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அன்னை இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தியிருந்தோம்.
தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்னை இந்திரா காந்தியின் பெயரை சூட்டி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறி உள்ளார்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், கட்டிடப் பழுது மற்றும் இடநெருக்கடி காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் கட்டப்படாததால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழேயே தற்காலிகமாக பேருந்துகள் நின்று செல்லும் நிலை நீடித்தது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்
இதைவைத்து, அதிமுக, பாமகவும் தங்களது பங்குக்கு அரசியல் செய்து வந்தன. இதையடுத்து, திண்டிவனம் தீர்த்தங்குளம் ஏரிப் பகுதியில் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்து, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டது. தற்போது அந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திண்டிவனம் பஸ் ஸ்டாண்டு இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசை கண்டுகொள்ளாமல், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பெயர் பலகைகளும் நுழைவு வாயிலில் வைத்தது. இது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது.
இதனால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அரசின் இந்த முடிவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரா காந்தி பெயரில் இயங்கிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைப்பதன் மூலம், இந்திரா காந்தியின் பெயர் மறைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியின் தலைவர்களின் பெயர்களை நீக்குவது முறையல்ல என்றும், பழைய பெயரையே சூட்ட வேண்டும் என்றும் சிவி சண்முகம் வலியுறுத்தினார்.
ஏற்கனவே பராசக்தி படத்தின் சர்ச்சை, திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், பேருந்து நிலையத்தின் பெயர் மறைக்கப்பட்ட விவகாரம் பிரச்சினையை பூதாகாரமாக்கியது. இதையடுத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும், இந்திராகாந்தி பெயரே நீடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், திண்டிவனம் பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயரே சூட்டப்படும் என அறிவித்தார். இதையடுத்து, கலைஞர் கருணாநிதி பெயர் அகற்றப்பட்டு இந்திரா காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது.
