சென்னை: மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, தொகுதி உட்பட்ட ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மருத்துவ உதவி, திருமண உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பயனர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் , செய்தியாளர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், “ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது; வேறு எந்த மாற்றமும் இல்லை. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமோ, நிதியோ அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.. இதற்கு மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்.
தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், கூட்டணி கட்சிகளுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவோம். அதற்கசான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.
திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்பட பல கட்சிகள் உள்ள நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டை முழுமையாக இறுதி செய்துவிட்டு, தேர்தல் பரப்புரையைத் தீவிரமாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் பிரச்சாரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன”, என்றார்.
இறுதியாக, அரசியல் எதிரிகள் குறித்த கேள்விக்கு, “நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை; விமர்சிப்பவர்களையும் நண்பர்களாகவே பார்க்கிறேன்” என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.