டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு (2027) நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் – இந்த ஆண்டு ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 30-க்கு இடையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தாலும் குறிப்பிடப்பட்ட 30 நாள் காலப்பகுதியில் நடைபெறும். இதையடுத்து 33 கேள்விகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை கடந்த 2025ம் ஆண்டு  ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியைத் தொடா்ந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக இந்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,   மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு  ஜனவரி 22ந்தேதி அன்று  வெளியிட்டது.

இதுதொடர்பாக, இந்திய பதிவாளா் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் வெளியிட்ட அறிக்கையில் , குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்க வேண்டிய 33 கேள்விகள் இடம்பெற்றன.

குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிய வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிவுநீா் வெளியேற்ற வசதி, குளியலறை வசதி போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும்.

வானொலி, தொலைக்காட்சி, கணினி, லேப்டாப், கைப்பேசி, அறிதிறன்பேசி, இணைய வசதி உள்பட 33 கேள்விகளை குடிமக்களிடம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப முறையில் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும் இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]