சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்   நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த திட்டத்தை ஜனவரி 9ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 2026ம் ஆண்டில் முதல் கேபினட் கூட்டம் இன்று (ஜனவரி 6ந்தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.  மேலும் தலைமைச்செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கேபினட் கூட்டத்தில்,  வரும் 20ந்தேதி தொடங்க உள்ள ஆண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்தும்   விவாதிக்கப்ட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. அத்துடன் உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,  உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றவர், இந்த திட்டத்தின்படி,   பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்லலாம். இதற்காக வீடு வீடாக சென்று 50,000 தன்னார்வலர்கள் சென்று பொதுமக்களின் கனவை கேட்டறிய உள்ளனர் என்று கூறினார்.

இந்தியாவிலேய சூப்பர் ஸ்டார்  மாநிலம்  என்று நமது ஸ்டேட் பெயர் பெற்றுள்ளது. முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறது என்று கூறிய அமைச்சர்,  உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தின்படி,  தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று  முதலில் படிவத்தை ((கனவு அட்டை) கொடுத்து விடுவார்கள்.  அதில் உங்களது கனவுகளை நிரப்பி அளிக்கலாம்.   இரண்டு நாள் கழித்து அந்த படிவத்தை பெற்று பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து, குடும்பங்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து நிறைவேற்ற உள்ளோம் என்றார்.

உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதுதான் இந்த திட்டம் என்றார். முத்தாய்ப்பான மூன்று கனவுகளை சொல்லுங்கள் என்று கேட்போம்.

இந்த திட்டம்,  ஜன.9ம் தேதி பொன்னேரியில் தொடங்கப்பட உள்ளது.  ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜன.11 முதல் “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்ட இணையதளத்தை பயன்படுத்தலாம் என்றவர், இந்த  திட்டம் மூலம் 2030ம் ஆண்டுக்குள் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என ஒரு மிஷனரி டாகுமென்டை உருவாக்க முடியும் என்று முதல்வர் நம்புவதாக தெரிவித்தார்.

[youtube-feed feed=1]