சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், மீண்டும் தங்களது பெயரை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்தால் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்-க்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், அவர்களுடைய வாக்குச் சாவடியில் படிவம் 6, 7, 8-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்காக 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் (SIR) நவம்பர் 4-ந்தேதி முதல் பணிகள் தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில், இறந்தவர்கள் வாக்கு, போலி வாக்கு, முறைகேடாக பெற்றுள்ள வாக்குகளை அகற்றும் வகையில், மாநிலம் முழுவதும் நவம்பர் 4-ந்தேதி முதல் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களை வீடுவிடாக விநியோகித்து, அந்த படிவங்களை நிரப்பி வாங்கினர். இதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 19ந்தேதி அன்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதாவது 15.18% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும், முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் மீண்டும் பெயர்களை சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எஸ்.ஐ.ஆர்-க்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், அவர்களுடைய வாக்குச் சாவடியில் படிவம் 6, 7, 8-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கக் கோரவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பிடுவது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” .
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]