சென்னை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வரும எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரும் டிச.28, 29 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வரும் டிச.28-ம் தேதி முதல் டிச.30 வரை திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, வரும் டிச.28 அன்று அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,
டிச.29 அன்று செங்கல்பட்டு கிழக்கு, சென்னை புறநகர் மாவட்டங்களில் திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,
டிச.30 அன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
