சென்னை: சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி நிறைவு பெற்றது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

சதுப்பு நிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் அங்கு கட்டிடம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில், அரசு மற்றும் தனியார்கள் ஆக்கிரமிப்புடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்சசியாக சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இநத மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எனக் கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது குறித்த அறிக்கையை உறுதி செய்வதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் இந்த விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]