டெல்லி: சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணிநீக்கம் சரியே என்றும், அவரது நடவடிக்கை மிக மோசமான ஒழுங்கின்மை என்றும், அவர் ‘ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்’ என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்திய ராணுவத்தில் அனைத்து மதங்களையும் குறிக்கும் அடையாளமாகத் திகழும் ‘சர்வ தர்ம ஸ்தலத்திற்கு’ (Sarva Dharma Sthal) செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின்பணிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தனது மத நம்பிக்கை இறைவனை மட்டுமே வழிபடுவது என்பதால், மற்ற மத அடையாளங்கள் உள்ள இடத்திற்குச் செல்ல முடியாது என அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்திருந்தார். அதனால், அவரை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், அவரது நடவடிக்கை மிக மோசமான ஒழுங்கின்மை என்றும், அவர் ராணுவத்துக்கு தகுதி அற்றவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது.
முன்னதாக, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சாமுவேல் கமலேசன் என்ற அந்த அதிகாரி, மேலதிகாரியின் உத்தரவை மீறி, மதத்தைக் காரணம் காட்டி சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்ல மறுத்ததால் ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், மே 30-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், “சட்டப்பூர்வமான ராணுவ உத்தரவை விட மதத்தை உயர்வாகக் கருதுவது தெளிவான ஒழுங்கீனம்” எனக் கூறி பணிநீக்கத்தை உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையான விமர்சனம்:
இந்த மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாக்ச்சி அடங்கிய அமர்வு, அதிகாரியின் இச்செயலை “மிக மோசமான ஒழுங்கீனம்” என கடுமையாக விமர்சித்தது. அவர் மற்ற விஷயங்களில் வேண்டுமானால் சியறந்த அதிகாரியாக இருக்கலாம். ஆனால், ஒழுக்கத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் பெயர் பெற்ற இந்திய ராணுவத்திற்கு அவர் முற்றிலும் பொருத்தமற்றவர்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
வழக்கின் விசாரணையின்போது, அதிகாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், “அதிகாரி சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்ல மறுக்க வில்லை. பஞ்சாபில் அவர் பணியில் இருந்த இடத்தில் சர்வ தர்ம ஸ்தலம் இல்லை, மாறாக ஒரு கோவில் மற்றும் குருத்வாரா மட்டுமே இருந்தது. அவரை கருவறைக்குள் சென்று பூஜை செய்யவும், தட்டில் ஆரத்தி எடுக்கவும் வற்புறுத்தினர்.
ஒரே இறைவனை வழிபடும் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர் என்பதால், மாற்று மதச் சடங்குகளைச் செய்ய மட்டுமே அவர் மறுத்தார். இது அரசியலமைப்பு அவருக்கு வழங்கிய உரிமை,” என்று கூறினார்.
இதை ஏற்க மறுத்த த நீதிபதிகள், நீங்க ஒரு குழுவின் தலைவர். உங்க படையில் சீக்கிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்காக குருத்வாரா உள்ளது. மதச்சார்பற்ற இடங்களில் ஒன்றான அங்கு செல்ல மறுப்பதன் மூலம், சொந்த வீரர்களையே நீங்க அவமதிக்கிறீர்கள் என்று சாடினர். மேலும், ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே (Pastor) இதில் தவறில்லை என்றும், சர்வ தர்ம ஸ்தலத்திற்குச் செல்வது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காது என்றும் உங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதி சூரியகாந்த் பேசும்போது, அந்த அதிகாரிக்கு அவரது தளபதி, மூத்த அதிகாரிகள் மற்றும் ஒரு கிறிஸ்தவ போதகர் உட்பட பல்வேறு மட்டங்களில் பலமுறை ஆலோசனை வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்பது கண்டறியப்பட்டது.
“மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு பெயர் பெற்றது இந்திய ராணுவம், ஆனால், நீங்கள் உங்கள் சொந்த படைப்பிரிவை அவமதித்துவிட்டீர்கள்..”, தலைமை நீதிபதி காந்த் காட்டமாக தெரிவித்தார். மேலும், உங்க சொந்த விளக்கத்தை வைத்துக்கொண்டு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
வேற்று மத ஆலயங்களுக்குச் செல்வதைக் கிறிஸ்தவ மதம் தடை செய்யவில்லை என்று கூறிய நீதிபதிகள், ராணுவத்தில் தனிப்பட்ட மத உணர்வுகளை விட, கூட்டுக்கட்டளை, ஒழுக்கமே முக்கியம் எனக் கூறி அதிகாரியின் வாதத்தை நிராகரித்தனர்.