சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15-ந்தேதி (நவம்பர்) தொடங்கி வைக்கிறார் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த தமிழ்நாடு அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதலில் ஒரு வேளை உணவு என கூறப்பட்ட நிலையில், பின்னர் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம்பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை இட்லி, பொங்கல் போன்ற டிபன்கள், மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் 3 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும், சென்னையில், தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும், . இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.