சென்னை; தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம் என பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.  திமுக ஊழலை மறைக்க மடைமாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின் என விமரசித்துள்ளார்.

‘பிரதமர், திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் பதவிக்கே அவமானம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, ‘தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்’ என்று பேசியிருந்தார். ஆனால், பிரதமரின் இந்த பேச்சை  ஒட்டுமொத்த  தமிழர்கள்மீதான வெறுப்பு என்பது போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  அவரைத்தொடர்ந்து திமுக ஆதரவு கட்சிகளும் பிரதமரை விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு  பாஜக மாநில  முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி காடுத்துள்ளார் , “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்.

நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ. 888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் பிகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.

தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பிகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

முதல்வர் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பிரதமர், தமிழகத்தில் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பதுதான் இருக்கிறது.

எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதேபோல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.

தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.