சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக திமுக கூட்டியுள்ள எ அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கட்சிகளான தவெக, நாதக, அமமுக உள்பட பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல முன்னாள் அதிமுக தலைவரான ஓபிஎஸ் உள்பட  பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நவம்பர் 4ந்தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதிமுக, பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், வரும் 2ந்தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமின்றி கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த  ‘ கூட்டத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய கட்சிகளை அழைக்க தி.மு.க. தலைமை நிலையச்செயலார்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் அலுவலகங்களுக் கும் சென்று அழைப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனத்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூச்சி முருகன் சந்தித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு கடிதத்தை வழங்கினார்.

அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு சென்று பூச்சி முருகன் அழைப்பு கடிதம் வழங்கி உள்ளார்.

மற்றொரு தி.மு.க தலைமை நிலையச் செயலாளரான துறைமுகம் காஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் காதர் மொய்தீன் மற்றும் நெல்லை முபாரக், ஜான் பா ண்டியன் அஞ்சாரி, ஜவாஹிருல்லா, உள்ளிட்ட தலைவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதங்களை வழங்கினார்.

மேலும், இன்னொரு தலைமை நிலையச் செயலாளரான ஆஸ்டினும் அழைப்பு கடிதங்களை வழங்கி வருகிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பொன்குமார், பஷீர் அகமது உள்ளிட்ட 30 கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.