சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 30 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 17 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். ஒரே நாள் இரவில் 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருவது மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.