மதுரை: புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் ஆபாச நடனம்  ஆடப்படுவது குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து,  தமிழ்நாடு அரசுக்கு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

குலசை தசரா விழாக்காலக்களில் ஒவ்வொரு ஊரிலும், அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம்  20 முதல் 100 பேர் வரை கொண்ட குழு அமைத்து, மேளதாளம் மற்றும் நாட்டுப்புற கலைகளான ஒயிலாட்டம், ஆலியாட்டம் , கோலாட்டம் , கரகாட்டம், காவடி ஆட்டம், கும்மி,  குறவன் குறத்தியாட்டம் போன்றவற்றுடன்  ஊர் ஊராக சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஆடிபாடி, குழுவில் உள்ள காளி மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி காணிக்கை பிரித்து, அதை பின்னர் கோவிலில் செலுத்தி தங்களது நேர்த்தி கடன்களை முடிப்பர்.  இவ்வாறு ஆயிரக்கணக்கான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சமீப காலமாக தகரா குழுவினருக்கு தேவையான நாட்டுப்புற கலைஞர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.  நாட்டுப்புற கலைஞர்கள் நலிந்துள்ளதால்,  நாட்டுப்புற கலைஞர்களை   தசரா விழாக்களுக்கு அழைப்பதில் கடுமையான சிரமம் எழுந்துள்ளது. இதனால் பல தசரா குழுக்கள், சினிமா நடிகைகள், துணை நடிகைகள் மற்றும், நடனக்குழுக்களைக்கொண்டு அமர்த்தி, தசரா குழுவுன் அழைத்துச் செல்கின்றனர். இந்த குழுவினர், ஊர் ஊராக தசரா குழுவினருடன் சென்று, ஆடிபாடி மக்களை கவர்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஆட்டம் சில சமயங்களில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக  இருப்பதால், இதற்கு வரவேற்பும், எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்றவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனுவில்; திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன், சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். கோவில் பாரம்பரியத்தின்படி பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன், புலி, வேடன் காவலர், ஆண்கள், பெண்கள் போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடமிடுவர். பின்னர் 48 நாட்கள் வரை விரதம் இருந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று தசரா இறுதி நாளில் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவர்.

கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தசரா குழுடிவினர், நடன கலைஞர்களைக் கொண்டு,   சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு   ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடி வருகின்றனர். இது  பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

இதுகுறித்து 2017ல் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தசரா விழாவில் அரை குறை ஆடைகளுடன் ஆடுபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும் ஆபாசமான பாடல்களுக்கு ஆடுவது தொடர்கிறது.

கடந்த 2023-ல் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் கோயில் விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சி, கோயில் தொடர்பானதாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை 2023, 2024 தசரா விழாவில் தசரா குழு பின்பற்றவில்லை.

எனவே, தசரா குழுவினர் ஆபாசமான பாடல்கள் பாடவும் ஆடவும் அனுமதிக்க தடை விதித்தும், கடந்த 2023ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து; கலை நிகழ்ச்சியில் பங்கேற்போர் மது அருந்தக்கூடாது என்று உத்தரவிட்டதுடன், தசரா குழுவில் ஆபாச நடனம் ஆடப்படுவது குறித்து, கண்காணிக்க,  குலசேகரபட்டினம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், உள்ளூரைச் சேர்ந்த தலா ஒரு முதியவர், இளைஞர், பெண் என 5 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், தசரா குழுவினடருன் உள்ள நடன குழுக்கள். ஆபாச நடனம் ஆடுவது உள்ளிட்ட விதிமீறல்கள் உள்ளதா? என்பதை இக்குழு ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் கூறி, வழக்கின்  விசாரணை அக்.9க்கு தள்ளிவைத்தனர்.

https://patrikai.com/flag-hoisting-at-kulasai-mutharamman-temple-tomorrow-due-to-dussehra-festival-traffic-diversion-full-details/