மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
மத்தியஅரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டிலும், மதுரை உள்பட 6 கோட்டங்களில் உள்ள 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை, சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பீட்டில், 125 திட்டமதிப்பீடுகள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தெற்கு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 90 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கியது. இதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பெரும்பாலான ரயில் நிலையங்களில் 60 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மற்ற ரயில் நிலையங்களில் பணிகள் இறுதிக்கட்டை எட்டியுள்ளன.
அம்ரித் பாரத் வசதிகள்:
அம்ரித் பாரத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கூடுதல் அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, முன்பதிவு அலுவலகம், கூடுதல் பயணிகள் இருக்கை, கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்த வசதி, டிஜிட்டல் தகவல் பலகை போன்ற வசதிகள் செய்யப் பட்டுள்ளன.