டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாட்டின் 14வது குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் செப்.09ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவர் மற்றும் முன்னாள் கவர்னர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். இவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன ரெட்டி களமிறங்கினார். இந்த தேர்தலில் இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.