சென்னை: இஸ்லாமியர்களின்  பண்டிகையான  மிலாதுன் நபி  நாளை கொண்டாடப்படும் நிலையில்,  நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால்  டாஸ்மாக் மது விற்பனை மூலம் பணம் கோடி கோடியாக கொட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பணம் காய்க்கும் மரமாக டாஸ்மாக் இருந்து வருகிறது. இதனால், குடி பழக்கத்துக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதனால் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பணத்தை குறிக்கோளாக கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அதை மூட மறுத்து வருகிறது.

இந்த நிலையில், நபிகள் நாயகம் பிறந்த நாளான  மிலாது நபி நாளை கொண்டாடப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலும், நாளை  மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வருகின்ற 05-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாதுன் நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது சென்னைக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.