சென்னை: ‘வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (19ம் தேதி( முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையை கடக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மேற்கு திசையில், காற்றின் வேக மாறுபாடு நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில், தற்போது நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு, தென் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வரும் 22ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.