டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள் மாநில பாஜக தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான  சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

 கோவையைச் சேர்ந்த சிபி.இராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் காட்டி கடந்த மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

யார் இநத் சி.பி.ராதாகிருஷ்ணன்?

1957ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பொன்னுசாமி – ஜானகி தம்பதியருக்கு மகனாக பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தனது 16 வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் போன்ற அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

முதலில் ஜனதா கட்சியில் இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த அவர்,

1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன்,

2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதையடுத்து, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

ஓராண்டாக அப்பதவியில் நீடித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்தாண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக பதவியேற்றார்.

இந்த நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.