சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அஞ்சலி மலர்தூவி  அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி  7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி  சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினாகடற்கரை வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். முன்னதாக . ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தார். இந்த பேரணியில், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.  பேரணியானது வாலாஜா சாலை வழியாக கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு கருணாநிதி சமாதியில், முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,  தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! என்று கூறியுள்ளார்.