தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரையும், அவர்களி படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிர் கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுடன் இலங்கை கடற்படை படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இந்திய எல்லையில் விசைப்படகுகளுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.