சென்னை
தமிழக அரசு சுகாதாரத்துறை முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் அறிவுறையின்படி, முதல்வர் 3 நாட்கள் மருத்துவமனையி; தங்கியுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் அங்கிருந்தபடி தனது வழக்கமான அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது சகோதரர் மு.க.முத்து மறைவன்று ஒருநாள் முழுவதும் முதல்வர் உணவு அருந்தாமல் இருந்துள்ளார் என்றும், மறுநாள் நடைபயிற்சி சென்ற அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது என்று விளக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன் ஓரிரு நாட்களில் ஓய்வெடுத்த பிறகு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். ஆயினும், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
எனவே தமிழக சுகாதாரத் துறை, முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.