மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் (பெனிக்ஸ், ஜெயராஜ்) காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட  வழக்கில் புதிய திருப்பமாக, குற்றவாளி பட்டியலில் இருந்து வரும்,  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,  இந்த வழக்கில் அரசு தரப்புக்கு ஆதரவாக,  அப்ரூவராக மாறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

 கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் ஆகியோரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் ஆய்வாளராக இருந்த  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என 9 பேரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது.  இந்த வழக்குகளில் 105 சாட்சிகளில் 52 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து 52 பேரிடம் தற்போது வரை சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது,  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அவரது மனுவில், இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மை யாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் சாட்சியாக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன், எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன், இந்த வழக்கில் அப்ரூவல் ஆக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறையினரால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன! நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!