சென்னை

முக முத்து மரணத்தையொட்டி முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியை சீமான் சந்தித்துள்ளார்.

நேற்று முன் தினம் மறைந்த முக முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்க நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்துள்ளார். இதர்கு பிறகு சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது சீமான் செய்தியாளர்களிடம்,

 “மு.க. முத்துவின் மறைவு எல்லோருக்கும் வருத்தம் அளித்தது. இது குறித்து உடனடியாக நான் இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். அவரது உடலை நேரில் காண வருவதற்குள் அடக்கம் செய்து விட்டனர். இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மு.க. முத்து உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார் என்று கூறுகின்றனர். மு.க. முத்துவின் இழப்பு பெருந்துயரம். இதற்கு ஆறுதல் கூறும் விதமாக அவர்களை இன்று நேரில் சந்தித்தேன். அரசியல், கொள்கை நிலைப்பாடு ஆகியவற்றை கடந்து ஒரு உறவு இருக்கிறது. அழகிரியை அண்ணா என்று தான் அழைப்பேன். இதேபோல், தயாளு அம்மாவை, எப்போதுமே அம்மா என்று தான் அழைப்பேன்.

அரசியலில் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம். ஆனால், எங்களுக்குள் என்றுமே பாசம் இருக்கிறது. ஒரு முறை நீண்ட நேரமாக பசியுடன் வெயிலில் நின்ற போது மயங்கி விழுந்து விட்டேன். அப்போது, உடனடியாக என்னை அழைத்து உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இவை அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மாண்பு.

மு.க. முத்துவை இழந்தது எனக்கும் பேரிழப்பு தான். சாதிய தீண்டாமையை விட அரசியல் தீண்டாமை கொடுமையானது. அந்த வகையில் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து, ஒரு பண்புடன் எல்லோரும் இருக்க வேண்டும். இது தமிழர் என்ற இனத்திற்கே உரிய பண்பாடு. காமராசர் மறைந்த போது, அண்ணா துரை அதிகமாக அழுதார் என்று படித்திருக்கிறேன்”

எனத் தெரிவித்தார்.

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு அளிக்கப்படுமா என்று சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, \

“இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு என்று ரகசியம் இருப்பதை போன்று, அனைத்திற்கும் ரகசியம் உள்ளது”

என்று சீமான் பதிலளித்தார்.