பெரியநாயகியம்மன் மற்றும் கருமாரியம்மன் திருக்கோவில், தொழுவணங்குடி,  திருவாரூர் மாவட்டம்

தல சிறப்பு :

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைப்போலவே இங்கும் முழு உருவத்தில் பெரிய அம்மனும் அதன் முன்புறம் தலை மட்டும் சுயம்பு வடிவத்திலும் உள்ளது. இதில் பெரிய அம்மன் சுதை வடிவில் இருப்பதால், சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

பொது தகவல் :

கோயில் மேற்கு பக்கம் வாயில் உள்ளது. பெரிய நாயகி அம்மன் மேற்கு பக்கம் பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். எதிரில் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. கோயில் விமானத்தில் 5 கலசமும், நுழைவு வாயிலில் மண்டபமாக உள்ளது. கிழக்குபக்கம் பார்த்த வகையில் ஒரு கலசத்துடன் தனி சன்னதியில் கருமாரியம்மனும், வினாயகர், பாலமுருகனும், எதிரில் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் உத்தண்டராயரும், ருத்ராண்டவரும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் 300 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் தரை தளம் உள்ளது.

பிரார்த்தனை :

திருமணத்தடை, புத்திரபாக்கியம், தீராத நோய், விவசாயம் செழிப்படைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால் அபிஷேகம் செய்வதுடன், புதிய தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

தலபெருமை :

வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் விவசாயம் சிறக்கவும், கள்வர்களிடம் இருந்து அறுவடைசெய்த தானியங்களை பாதுகாக்கவும் அப்பகுதியினர் அம்மனை வணங்கியுள்ளனர் நாளடைவில் கோயில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கும் கிழக்கில் தியாகராஜர்கோயிலும், தென் கிழக்கில் திருக்கண்ணமங்கை பெருமாள், தென் மேற்கில் எண்கண் முருகன் கோயில் இருப்பது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது. பல்வேறுப் பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தல வரலாறு :

பவித்திரமாணிக்கம் ருத்ரகாளியம்மன் கோயில் தோன்றிய காலத்தில் இக்கோயிலும் தோன்றியுள்ளது காடு சூழ்ந்தபகுதியில் விவசாயங்களை பாதுகாக்க கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்ய இறைவனை தொழ வேண்டும் என முன்னோர்கள் கட்டளையிட்டதால் அதன்பெயரால் தொழுவணங்குகுடி என அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருவிழா :

ஆடிவெள்ளி, ஆவணியில் சம்பத்ரா அபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாதந்தோறும் அமாவாசை ஹோமம்.