நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் தேசிய தேர்வு நிறுவனம் (NTA) அதிகாரிகளுடன் கைகோர்த்து இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ. 90 லட்சம் பெற்றதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் ”

“தரம், தரம் என்றார்கள்!

NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்!

ஆர்.எஸ்.எஸ் – பாஜக மாநாடுகளில் காட்சிப்பொருளாக-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ