சென்னை; தமிழ்நாடு அரசு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தினால், “UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் சாதனை” நிகழ்ந்துள்ளது, என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற நம் மாணவர்கள், யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும், குடிமைப்பணிகளுக்கான IAS, IPS, IRS உள்ளிட்ட ‘UPSC’ சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளின் முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெற்றது. இந்தாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில், தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன், உங்கள் வெற்றி முகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ”இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.