மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோவை மாவட்டம்

தல சிறப்பு :
கருவறையில் மாகாளியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிவது சிறப்பு.
பொது தகவல் :
அஷ்டபுஜ, மகாலட்சுமி துர்க்கை சன்னதியும் முக மண்டபத்தின் மேற்குப்புறம் பாலகணபதி, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் சன்னதிகளும் உள்ளன. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் நவகிரகங்களும் உள்ளனர்.
தலபெருமை :
சிறிய கோயிலாக இருந்தாலும் நல்ல முறையில் பராமரித்து தூய்மையைப் பேணி வருகின்றனர். கோயிலின் உள்ளே நுழைந்தால், வலப்புற மூலையில் முருகன் சன்னதி உள்ளது அருகே அஷ்டபுஜ மகாலட்சுமி துர்க்கை சன்னதியும் முக மண்டபத்தின் மேற்குப்புறம் பாலகணபதி, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் சன்னதிகளும் உள்ளன. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் நவகிரகங்களும் உள்ளனர். கருவறையில் மாகாளியம்மன் அழகே உருவான சாந்த சொரூபிணியாக நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிகிறாள். ஒவ்வொரு தமிழ் மாத முதல் நாளிலும் பக்தர்களுக்கு அம்மனின் ஆனந்த தரிசனம்தான் முதல் வெள்ளியன்று மகாகாளி, இரண்டாவது வெள்ளியில் வரலட்சுமி, 3வது வாரம் சமயபுரம் மாரியம்மன், 4 வது வாரம் திருக்கடையூர் அபிராமி, கடைசி வார வெள்ளியன்று அகிலாண்டேஸ்வரி அலங்காரம் என விதவிதமான வடிவங்களில் திருவிழா கோலம் காண்பாள் அன்னை.
தல வரலாறு :
பராசக்தியான அம்பிகை உலக உயிர்களைக் காத்திடும்போது ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் ஒவ்வொரு ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் அம்பிகை பல அவதாரங்கள், எடுத்து கால நேரங்களுக்குத் தகுந்தாற்போல் நம்மைக் காத்து வழி நடத்திச் செல்கிறாள். அந்த தேவியின் திரு அவதாரங்களுள் ஒன்றுதான் மாகாளி அவதாரம் பொதுவாக காளி என்றதும் நம் கண்முன் தோன்றுவது அவள் ஆடும் ஊழிக் கூத்துதான் ஆனால் நமக்கு புத்தியைக் கொடுக்கும் ஞான ரூபிணியாகவும், மோட்சத்தைக் கொடுக்கும் மோட்சப் பிரதாயினியாகவும் விளங்குபவள் அவளே.
திருவிழா :
ஆடி மாதத்தில் வரலட்சுமி நோன்பு, வைகாசியில் கல்யாண உற்சவம் முதலிய விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
பிரார்த்தனை :
திருமணங்கள் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு உப்பையும் மிளகையும் அம்மன் பாதத்தில் வைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.