ஊட்டி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்த முதல்வருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார்.

முதல்வரை நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் ஆட்சியர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் முதல்வருக்கு புத்தகங்கள், சால்வை, பூங்கொத்து கொடுத்து பொதுமக்கள்உற்சாகமாக வரவேற்றனர்.

ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு அவர் வந்தப்போது ஆ.ராசா எம்.பி., தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உடனிருந்தனர்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிடுகிறார். பிறகு நாளை மறுநாள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறார். வரும் 16-ந் தேதி சுற்றுப்பயணம் முடிந்து கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.