சென்னை
இன்று தமிழ்கத்தில் உள்ள அணு மற்றும் அனல் மின் நிலையங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

சில முக்கிய இடங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்கள் தலைமையில் மாநில மற்றும் மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, இன்று போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு – 2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது. அப்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசர கால செயல்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.