சென்னை: அரசு நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு மே 6ந்தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி, நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்தார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது கிண்டியில் உள்ள அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்ததாகப் பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மா.சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மா.சுப்பிரமணியனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது.
அதன்படி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் ஆஜராகவில்லை எனப் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி, வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராகவில்லை என்றால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
…