சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்வார விழா நிகழ்ச்சியையொட்டி, சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வார விழாவின் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, 5 எழுத்தாளர்களின் நுல்கள் நாட்டுடமை ஆக்கப் பட்டு, அதற்கான பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது. இதையடுத்து, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கினார். அதன்படி எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வென்ற மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.
விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும்,
வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும், தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.
தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் ‘பூச் செண்டு’ என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். ‘உன் வாழ்க்கை உன் கைகளிலே’ என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.
ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர். கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.