சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் நடுநிலை மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள்,  விலை உயர்வுக்கு  அனுமதி கோரி, கடந்த ஏப்ரல்  16ல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால், கட்டுமான பணிகளுக்கு தேவையான ஜல்லி, எம்சாண்ட் போன்றவை கிடைக்காததால்,  கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,   அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி, ஏப்., 21ல் எம்-சாண்ட், கருங்கல் ஜல்லி, பி-சாண்ட் போன்றவற்றின் விலையை, யூனிட்டுக்கு தலா, 1,000 ரூபாய் உயர்த்தினர்.

இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி,   இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், குவாரி, கிரஷர் உரிமையாளர்களை அழைத்து, ஏப்ரல், 27ல் மீண்டும்  பேச்சு நடத்தினார்.

இதன் அடிப்படையில் எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி போன்றவற்றை, ஏற்றப்பட்ட விலையில் இருந்து, 1,000 ரூபாய் குறைத்து விற்க, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரசின் அறிவிப்பை குவாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கூடுதல் விலையிலேயே ஜல்லி, எம்-சாண்ட் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் அடிப்படையிலேயே, பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள், தற்போதும் விற்பனை செய்கின்றனர். அதனால் அரசு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  பாமக நிறுவனர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டதால், அவற்றிற்கு அதிக ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அத்துடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் சிறு கனிம நிலவரி விதிக்கப்பட்டது. இவற்றால் ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டன.

இதைக் கண்டித்தும் ராயல்டி உயர்வு, புதிய நிலவரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மாதம் 22-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களை அமைச்சர் துரைமுருகன் கடந்த 27-ஆம் தேதி அழைத்துப் பேசினார்.

அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 எனக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொட்ர்ந்து உயர்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.

எனவே, தமிழக அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.