காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்றுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை  இவருக்கு சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார்.

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா நடைபெற்றது. இதையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோவியில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

ஸ்ரீ கணேச சர்மா கருடாசனம் நிலையில் அமர்ந்து குருவை வணங்கினார். சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்ற பின்பு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு தண்டத்தை வழங்கினார்.  இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பிறகு கோவிலில் இருந்து கொல்லா சத்திரம், ராஜ வீதி வழியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர். மடம் வந்து சேர்ந்ததும் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.