சென்னை

மிழக் கல்லூரி கல்வி இயக்குநரகம் கோடைவிடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் மாரச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி (திங்கள் கிழமை) திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது