சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த  4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில்  அமைச்சர்கூறினார்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டம், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை சி.வி.கணேசன்,  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 ஆண்டு முதல் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 2 லட்சத்து 49,391 நபர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ராமநாதபுரத்தில் மட்டும் 7 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தபட்டுள்ளது. மேலும், அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று பதில் அளித்தார்.

இதனை தொடர்ந்து நூலகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கும் சட்டசபையில் பதில் அளிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையர் மலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஊரக பகுதிகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.  அந்த பணியை  அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  சட்டமன்ற உறுப்பினர் கேட்ட இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.