சென்னை
தமிழகத்தில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெர்வித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ,
”மகளிர் விடியல் பயணம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் 675 கோடியே 98 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு வருகின்ற நிதியாண்டிற்கு ரூ.3,600 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
அதே போன்று, புதிய பேருந்துகள் வாங்க 2024-2025-ம் ஆண்டு ரூ.1,535.89 கோடியை ஒதுக்கி 3 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு முதல்-வர் உத்தரவிட்டார். அதிலே 1,210 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஜெர்மன் வங்கி உதவியுடன் 552 தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
மேலும் ஜெர்மன் வங்கி உதவியுடன் 1,214 சாதாரண டீசல் பேருந்துகள் வாங்குவதற்கு 7-10-2024 அன்று ஒப்பந்தம் விடப்பட்டு, விரைவிலே அந்தப் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அதேபோல, ஜெர்மன் வங்கியின் மூலமாக 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு 11-10-2024 அன்று ஒப்பந்தம் விடப்பட்டு அந்தப் பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இதுமட்டுமல்லாமல், இந்த 2025-2026-ம் ஆண்டிற்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு, அதுவும் தற்போது ஒப்பந்த நிலையில் இருக்கிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மொத்தம், 3,778 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. மீதி 8,129 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளன. மேலும், காற்று மாசுபடுவதைத் தடுக்க, 746 புதிய இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) பபேருந்துகளை வாங்கவும், இயங்குகின்ற பேருந்துகளில் ஆயிரம் பேருந்துகளை சி.என்.ஜி. பஸ்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
என்று தெரிவித்துள்ளார்.