திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம்.

திருவிழா:

திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி.

தல சிறப்பு:

இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலமாம். இது வியாழன் தலமாகும். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்:

பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

குதிரை முக நந்தி:அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார்.

இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக்கொண்டதாம்.

எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை காலபைரவர் என்றும், வாகனம் இல்லாதவரை வீரபைரவர் என்றும் கூறுகின்றனர்.

குருதலம்:

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பற்றாக்குறையாக இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதனே இல்லை.

பற்றாக்குறை நீங்க வேண்டுமானால், ஆசைகளை குறைக்க வேண்டும். ஆசைகள் குறைய வேண்டுமென்று மனிதன் பேசுகிறான், எழுதுகிறான்.

ஆனால், நடைமுறையில் முடியவில்லை. அப்படியானால், இந்த சக்தியை இறைவன் தான் தரமுடியும். அதே நேரம், நவீன காலத்திற்கேற்ப சில சாதனங்களும் நமக்கு தேவைபடத்தான் செய்கிறது.

எப்படியோ கையிலே நாலு காசு இருந்தால் தான் உலகம் மதிக்கிறது. ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.

சிறப்பம்சம்:

இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “நடுகைலாயம்’ என்கின்றனர்.

இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

விநாயகருக்கு சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.

சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் “முறப்பநாடு’ என்ற பெயர் வந்ததாம்.

தல வரலாறு:

சோழமன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்தது.

இந்த முகம் மாற வேண்டி சிவபெருமானை எண்ணி பிரார்த்தித்தான் அரசன். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். சோழனும் இங்கு வந்து நீராடினான். மன்னனின் மகள் முகம் மனித முகமாக மாறியது.

பின்னர் சோழ மன்னன் சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். இக்கோயிலை வல்லாள மகாராஜா என்பவர் கட்டியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில், நவக்கிரகங்களில் குருவிற்குரிய ஸ்தானத்தை பெறுகிறது.

நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது.

அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை “தெட்சிணகங்கை’ என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்களில் சென்றால் 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் இறங்கலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ. தூரம் நடந்தால் கோயிலை அடையலாம்.