சென்னை:   மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை முழுமனதோடு ஆதரிப்பதாகவும்,   வக்ஃப் சொத்துக்களை நீண்டகாலமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். மசோதாவுக்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள் என  தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் காங்கிரஸ், திமுக என பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை வரவேற்பதாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத்  குறிப்பிட்டுள்ளாளர்.

 

இதுதொடர்பாக சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த ஷேக் தாவூத்   ”வக்ஃப் திருத்தச் சட்டத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் முழுமனதாக வரவேற்கிறது. வக்ஃப் சட்டத்தின் மூலமாக அனைத்து சொத்துக்களையும் டிஜிட்டல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் வக்ஃப் ஆவணங்கள் அனைத்தும் வெளிப்படை தன்மையோடு அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்கிறது. இந்த மசோதாவுக்கு  கேரள அரசும் ஆதரவளித்துள்ளது.

இந்த மசோதா வஃபு வாரியத்தில் உள்ள  பல குளறுபடிகளை மாற்றும் விதமாக வக்ஃப் திருத்த மசோதா இருப்பதாக கூறியவர்,  இந்த சட்டம் ஏப்ரல்  8ம் தேதியிலிருந்து இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை வக்ஃப் நிலத்தின் மூலம் பெறப்பட்ட பணம் ஏழை, எளிய மக்களை சென்றடையவில்லை

. மத்திய அரசின் மசோதா மூலம் இனி வக்ஃப் வாரிய சொத்துக்களில் இருந்து பெறப்படும் பணம் நேரடியாக ஏழை, எளிய இஸ்லாமியர்களை சென்றடையும்.

வக்ஃப் வாரியத்தின் பணத்தை எல்லாம் ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்திருந்தால் இந்நேரம் இஸ்லாமியர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருப்பார்கள். ஆனால் இதுவரை ஒரு சிலர் மட்டுமே வக்ஃப் சொத்துக்களின் மூலம் பெறப்படும் பணங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வக்ஃப் வாரியத்தில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனால்தான்  வக்ஃப் சொத்துக்களை நீண்டகாலமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். மசோதாவுக்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள்.

வக்ஃப் சொத்துக்களை இத்தனை நாட்கள் அனுபவித்து கொண்டிருந்தவர்கள் மீது குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது சிறை தண்டனை வழங்கும் வகையில் தண்டனை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளேன்.

மத்திய அரசின் சட்டத்தை இஸ்லாமியர்களும், மக்களும் வரவேற்கிறார்கள். என்னுடைய முன்னோர்களுமே இந்து தான், ‘குப்பனும் சுப்பனும்’ தான் இப்போது கிறிஸ்டியனாகவும், முஸ்லிமாகவும் மாறியுள்ளார்கள்.

இங்கு யாரும் ‘பாய்’ கிடையாது. பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கூட எனது மாமா தான்.

வக்ஃப் மசோதாவை எதிர்ப்பவர்கள் ஒரு சீட்டு, இரண்டு சீட்டுக்காக கைகட்டி நிற்பவர்கள். நான் யாரிடமும் சீட்டுக்காக கைகட்டி நின்றதில்லை.

கோயில் வருமானம், இந்து சமய அறநிலையத்துறை என்றால் கணக்கு காட்ட வேண்டும்.

ஆனால் முஸ்லிம்களின் சொத்துகள் வக்ஃப் வாரிய சொத்துக்கள் என்றால் கணக்கு காட்ட வேண்டாமா?

வக்பு வாரிய உறுப்பினர்களில் இரு இந்துக்களை வைத்தால் என்ன தவறு?

வக்ஃப் திருத்தச் சட்டத்தால் பயன்பெறும் ஒவ்வொரு ஏழை, எளிய இஸ்லாமியர்களும் கண்டிப்பாக அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

அதிமுக – பாஜக கூட்டணியினால் திமுக பதற்றத்தில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து ”டாஸ்மாக்கில் 39 ஆயிரம் கோடி ஊழல் உள்ளது என குற்றம்சாட்டிய ஷேக் தாவூத், அமைச்சர் பொன்முடியின் கீழ்தரமான பேச்சுகளும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தூசி தட்டி விசாரிக்க தொடங்கியிருப்பதும் முதல்வரின் பதற்றத்துக்கான காரணம்”

இவ்வாறு கூறினார்.