சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருப்பதால்,  தேர்தல் தொடர்பாக அதிமுக தலைவர்கள் தீவிரமாக களப்பணியியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, திண்டுக்கலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடும் நிலையில்,  இதில் கலந்துகொள்வதற்காக நேற்று  சென்னை திரும்பினார். இந்த  நிலையில், சென்னையில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு ஒவ்வாமை காரணமாக அவதிப்பட்டதால்,  சென்னை கீரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  அப்போலோ  மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.