சென்னை: ‘இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன், இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை; எந்த கட்டுப்பாடும் இல்லை’  என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

பாஜக மாநில தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, ஆட்சி செய்துவரும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நிலையில், அதிமுக ஆட்சி கால ஊழல் குறித்தும் விமர்சித்தார். இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டணி பிரிந்தது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதற்காக, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து விலக அதிமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மேலிடம் அண்ணாமலையிடம் பேசிய நிலையில், அண்ணாமலை தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை தவிர்த்தார். அதனால், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக இன்று மாலை பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில்,  சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில்  மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கலந்துகொண்ட அண்ணாமலை  கூறியதாவது,

நிகழ்ச்சியில் பேசிய  அண்ணாமலை , “அமமுக பொதுச்செயலாளர் நேற்று மருத்துவமனைக்கு செல்வதாக 2 நாட்களுக்கு முன்பாகவே கூறிவிட்டார். டிடிவி தினகரன் அண்ணாவின் இதயம் நல்ல இதயம் என்று அனைவருக்கும் தெரியும். அதனை மருத்துவர்களே சான்றிதழ் கொடுத்து உறுதி செய்துள்ளனர். நீங்கள் அற்புதமான மனிதர் என்று பழகி பார்த்த அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கட்சிதலைவர்  பதவியில் இருந்து விலகி உள்ளதால்,  இனி நான் சுதந்திரமாக பேச ஆரம்பிப்பேன். இதுவரை எனக்கு பொறுப்பு எனும் கட்டுப்பாடு இருந்தது. இனி நான் அண்ணாமலையாக அதிரடியாக அரசியல் பேசுவேன். ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆடவேண்டிய பாக்ஸிங் கலை தேவைப்படுகிறது. அதனால் பேச்சு ஸ்டைலை இனி மாற்றிவிடுவேன்.

கட்சி குறித்த பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இனி இருக்கிறார். கூட்டணி பற்றி நீங்கள் ஒன்று சொன்னீர்களே என்றால் அவரை கைகாட்டி விடுவேன். அவர் தடுத்து ஆடும் ஆட்டத்தை பார்ப்பார். இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை”

இவ்வாறு கூறினார்.

தமிழ் ஜனம் இரண்டாம் ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் மது உரையாற்றினார்.