சென்னை: இன்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்ல செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

2026 நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தற்போது திமுக ஆட்சியை நீக்க வேண்டும் என குறிக்கோளுடன் அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் செயலாற்றி வருகின்றன.  திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுகவுக்கு எதிராக மாற்று கூட்டணியை உருவாக்க பாஜக தலைமை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, தற்போது மாநிலதலைவராக உள்ள அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதிமுகவுடன் நெருக்கமாக உள்ள ஒரு தலைவரை மாநில தலைவராக நியமிக்க ஆலோசித்து வருகிறது.

இதுதொடர்பாக பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஆலோசனை மேற்கொள்ள பாஜக மூத்த தலைவரும்,  மத்திய உள்துறை அமைச்சருமான  அமித் ஷா இன்று இரவு தனி விமானத்தில்  சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர்,  தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்து உள்ளார். அம்பேத்கரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாளை கருப்புக்கொடி போராட்டம்.  தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாளை போராட்டம் நடைபெறவுள்ளது  என கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் பாரபட்சம், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுப்பது, இந்தி மொழி மற்றும் நீட் தேர்வு திணிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக இந்தியா கூட்டணி கட்சியினர் மீது வழக்குகள், சோதனைகள் மற்றும் அடக்குமுறைகள் என சர்வாதிகார, பாசிச முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை தமது அதிகார பலத்தால் அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஆளுநரை பயன்படுத்தி தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். ஆனால், அதற்கெல்லாம் பாடம் புகட்டுகிற வகையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் நாளை (11.4.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பிப் போ என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.