சென்னை: மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக  1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வார விடுமுறை தினங்கள் உள்பட முக்கிய பண்டிகை நாட்கள் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வழக்கமாக இயக்கி வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த வாரம் மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், அதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.  அதாவது,  நாளை  மறுநாள் (ஏப்ரல் 11ந்தேதி – வெள்ளிக்கிழமை) மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு விடுமுறை வருவதாலும், ஏப்ரல் 14ந்தேதி  (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு விடுமுறை தினம் என்பதாலும், இந்த விடுமுறை தினங்கள் மற்றும் இடையில் வரும் வார விடுமுறை தினங்களை கணக்கிட்டு, பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  மகாவீர் ஜெயந்தி 11/04/2025 (வெள்ளிக்கிழமை) 12/04/2025 (சனிக்கிழமை), 13/04/2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14/04/2025 அன்று தமிழ்ப்புத்தாண்டு என தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/04/2025, 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நாளை  (ஏப்ரல் 10ந்தேதி வியாழன்) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை அன்று 190 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

நாளை மறுதினம் (வெள்ளிக் கிழமை)  அன்று 525 பஸ்களும், சனிக்கிழமை அன்று 380 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு  இன்று (புதன் கிழமை)  அன்று 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை அன்று 100 பஸ்களும், சனிக்கிழமை அன்று 95 பஸ்களும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மாதவரத்திலிருந்து புதன்கிழமை அன்று 20 சிறப்பு பஸ்களும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

மேலும், 14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.