சென்னை: அரசு குடியிருப்புகளுக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன், முதல்வர் திறனகம், முதல் படைப்பகம், அரசு குடியிருப்புகள் புணரமைப்பு   உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறையின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சுயசான்றிதழ் மூலம் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி, மாதிரி கட்டட வரைபடங்கள் உருவாக்கம், குடிசை தொழில்களுக்கு உடனடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஒவ்வொரு துறையின் கீழ் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வீட்டு வசதி துறையின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு:=

  1. சுயசான்றிதழ் மூலம் தூண்தளம் மற்றும் இரண்டுதளம் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
  2. குடியிருப்பு கட்டடங்களுக்கான நிலையான மனை அளவுகள் கொண்ட மாதிரி கட்டட வரைபடங்கள், முகப்பு தோற்றம் மற்றும் குறுக்கு வெட்டு தோற்ற விவரங்களுடன் பொதுமக்கள் எளிதாக  கட்டட அனுமதி பெறும் வகையில் உருவாக்கப்படும்.

குடிசை தொழில்- உடனடி அனுமதி

  1. குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  2. வரிசை வீடுகள்  (Row houses) மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு (Group houses) பக்கத்திறவிடம் தளர்வு போன்ற சிறப்பு விதிகள் சேர்க்கப்படும்.

5, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.

காலக்கெடு நீட்டிப்பு

  1. நீர்நிலைக்கு அடுத்துள்ள பள்ளி கட்டங்களுக்கு நீர்நிலைப்பக்கத்தில் எந்த திறப்புகளும் இல்லாத வகையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமெனில் பள்ளி கட்டங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  2. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே சேவை சாலை உருவாக்குமெனில்,  அப்பள்ளி கட்டங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  3. உட்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணங்கள், வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்படும்.

வாகன நிறுத்துமிடம் தனி விதிகள்

  1. ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டிற்கு வாகன நிறுத்துமிடத்திற்கென தனி விதிகள் உருவாக்கப்படும்.
  2. திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
  3. தமிழ்நாட்டில் முழுமைத்திட்டம்  (Master plan) தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்.
  4. மலையிட பகுதிகளில் (Hill stations), திட்டஅனுமதி செயல்முறை மற்றும் பிற திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்த, நகர்ப்புற திட்டமிடுபவர்கள்/ பொறியாளர்கள்/ கட்டடக் கலைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வீட்டு மனை மேம்பாட்டு திட்டம்

  1. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 1.97 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  2. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8.19 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ. 9.13 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்காக முதற்கட்டமாக 100 வாடகை குடியிருப்புகள் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி

  1. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், 31.03.2015க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, மாதத் தவணை தொகையினை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும்அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டிற்கு 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இச்சலுகை 31.03.2026 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ள இயலும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன்

  1. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 2024க்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் (Hire Purchase Scheme) கீழ் விற்கப்படும்.
  2. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன்  வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.