சென்னை: உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்குத்தான் கட்டுப்பாடு,  சுற்றுலா பயணிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் மறுஆய்வு செய்யக்கோரிய மனு மீது ஏப்ரல் 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல், ஜூன் மாதம் இறுதி வரை, வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.   இந்த உத்தரவுக்கு அந்த பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து,  இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  இந்த கட்டுப்பாடு காரணமாக, ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டதாகவும் கூறியது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமனற்ம்,  உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியதுடன்,   உதகை, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது என தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இந்த மனுமீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என கூறி உள்ளது.

[youtube-feed feed=1]