சென்னை; மறைந்த முன்னாள் முதல்வரின் மனைவியும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தாயுமான தயாளு அம்மாள் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தயாளு அம்மாளை காண , முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை சென்றுள்ள நிலையில், மு.க.அழகிரியும் மருத்துவமனை விரைந்துள்ளார். தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க மதுரையில் இருந்து விரைந்து வந்த மு.க.அழகிரி, சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார். அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.