சென்னை: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்த  மத்திய, மாநில அரசுககளி பதில் அளிக்க உத்தரவட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  யானை வழித்தடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பு விடுதிகளை அகற்ற சோலூர் பஞ்சாயத்து உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  என கேள்வி எழுப்பியதுடன்  மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் பஞ்சாயத்தை யானைகள் வழித்தடமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோல் உதகை உள்ளிட்ட பல பகுதிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்து உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் வழக்கு தொடர முடிவு செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் விடுதிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சோலூர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளின் குறைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு,  ஆய்வு செய்து அறிக்கை அளித்தது,.

அதன்படி,  சோலூர் யானைகள் வழித்தடத்தில் 1991ஆம் ஆண்டுக்கு பின், அங்கே நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என்று கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என தனியார் விடுதிகளுக்கு உத்தரவிட்டது. அவ்வாறு அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகமே கட்டிடங்களை இடித்து நிலத்தை கையகப்படுத்தும் என அறிவித்தது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சோலூர் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவை அரசு ஏன் அமல்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும், சிறப்புக் குழு அறிக்கையின் கீழ் பஞ்சாயத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இதுகுறித்த மத்திய மாநில அரசுகள் பிப் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ஆம் தேதி ஒத்திவைத்தனர்.