மதுரை
மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்ட அனுமதி கோரிக்கையை அவசர வாக்காக விசாரிக்க மறுத்துள்ளது.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் ம்ற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. தர்கா நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டதால் திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார்.
எம்பியுடன் வந்தவர்கள் அப்போது மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி நாளை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆயினும் திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு செய்திருந்த நிலையில் இதை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.